சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உளநல பிரிவிற்கான சமூக சுகாதார மையம் நேற்று (09) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த சுகாதார மையத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல், பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.ஏ.கபூர், பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம்.நௌஷாட், சம்மாந்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஜீவா, பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஹபீப் முஹம்மட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் அவர்களின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிராந்தியத்தில் மேலும் மூன்று சமூக சுகாதார மையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இச்சமூக சுகாதார மையத்தினை திறப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உளநல சேவையினை மேம்படுத்தி அதனூடாக சிறந்த பணிகளை முன்னெடுத்து ஆரோக்கியமிக்க சமூகம் ஒன்றினை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மிக நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மீன் தொட்டி புணரமைக்கப்பட்டு அதனுள் நுளம்பு குடம்பிகளை உண்ணக்கூடிய கப்பீஸ் மீன்களும் இடப்பட்டதுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சில பிரிவுகளுக்கு அவசர தேவையாக காணப்பட்ட மின்விசிறிகளும் பணிப்பாளர் அவர்களினால் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.









0 comments:
Post a Comment