உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (23) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் இடம்பெற்றது.
தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை போன்றவற்றிக்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களே இதன்போது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக அதாஉல்லா அஹமட் ஸக்கி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அதேவேளை அஸ்மி ஏ.கபூர் பிரதி மேயராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக எம்.ஏ.றாசீக் மற்றும் உப தவிசாளராக ஏ.எம்.அஸ்ஹர் ஆகியோர் இன்றைய தினம் ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வின் போது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபீஸூம் கலந்துகொண்டு சத்தியப்பிரமாணம் செய்தார். அப்போது கட்சியின் ஆதரவாலர்கள் கைதட்டி ஆரவாரப்படுத்தினர். இச்சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் அஹமட் ஸக்கி கிழக்கு மாகாண ஆளுநருக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் மற்றும் தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள், உலமாக்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment