(முஹம்மட் இர்பான்)
ஒரு மனிதனின் முள்ளந்தண்டு எவ்வாறு அவசியமோ அதேபோல் ஒரு பிரதேசத்தை அல்லது நகரத்தை சுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்கள் காணப்படுகின்றார்கள் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஏறாவூர் கிளை அனுசரணையின் கீழ் நகரசபையில் கடமையாற்றுகின்ற 50 சுகாதார தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 1700 ருபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (16) ஏறாவூர் நகர சபையின் கூட்ட மண்பத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார ஊழியர்கள்தான் முதலில் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் அவ்வாறு இருந்தால்தான் நகரத்தை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வார்கள். அப்படியில்லை என்றால் நகரம் சுத்தமாக ஒருபோதும் இருக்காது.
சுகாதார ஊழியர்களின் சுகாதாரத்தை பேனுவதற்கு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள், கையுரைகள் கொள்வனவு செய்ய இருந்தபோது மாகாண உள்ளுராட்சி அமைச்சினால் ஜனவரி மாதமளவில் அவைகள் கிடைக்கவுள்ளன.
அதுமாத்திரமல்ல அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பயிற்சித்திட்டத்தினையும் வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளேன். நகர சபையினை இரண்டு கண் கொண்டு பார்கின்றேன். அதில் ஒரு கண்ணாக எமது சுகாதார ஊழியர்களையும், மற்றய கண்ணாக ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் நான் பார்க்கின்றேன்.
நான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பது சுகாதார உழியர்களுக்கே. அவர்களின் குறை நிறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என்ற பணிப்புரையினை எமது ஆலுவலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளேன்.
எமது நகரை சுத்தமாகவும், சுகாதாரமுள்ள இடங்களாகவும், டெங்கு போன்ற உயிரைப் பறிக்கும் ஆபத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒரு தியாகச் சிந்தனையுடனும் பாரிய அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்ற சுகாதார ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுகின்றவர்களாக நாம் இருக்கின்ற இதேவேளை எமது பிரதேச மக்களும் இருக்கவேண்டும் என்றார்.

0 comments:
Post a Comment