அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் பலர் அக்கட்சி மீது அதிருப்தியுற்று ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளனர்.
இதுதொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ்) யை சந்தித்து கலந்துரையாடினர்
ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ்) யின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கால்பதித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்றுவரைக்கும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எந்தவொரு ஆக்கபூர்வமான அபிவிருத்திப் பணிகளையும் செய்யவும் இல்லை செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுமில்லை.
மேலும் கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீனால் அம்பாரை மாவட்டம் உட்பட அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் வைத்து வழங்கிய பல வாக்குறுதிகள் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
இருந்த போதிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு 2/3 பெரும்பான்மைக்கு கண்மூடித்தனமாக ஆதரவளித்தமை குறித்தும் அதிருப்தியுற்றே அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் அக்கட்சியை விட்டு வெளியேற தீர்மானித்ததாக தெரிவிக்கின்றனர்.
சிறிய கட்சிகளை வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்று தலைவர்களாக உலாவுகின்றவர்கள் இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் காலடிக்கே செல்கின்றனர். இவர்கள் தங்களுடைய தேவைகளையும், பொருளாதாரத்தையும் விருத்தி செய்வதிலே அக்கரையாகவுள்ளனர். இவர்களுக்கு பின்னால் சென்று ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பதனை விட நேரடியாக ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெறுவதே மேல் என அக்கட்சி மீது அதிருப்தியுற்ற ஒருவர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த விமோசனமும் கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment