(றியாஸ் ஆதம்)
அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.
அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழன் மாலை (01) அறுகம்பே Paddyway உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே அரை மரதன் போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், 6வது தடவையாகவும் குறித்த மரதன் ஓட்டப்போட்டியினை நடாத்தவுள்ளோம். அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அறுகம்பை பிரதேசத்தை நோக்கி அதிகரித்துக் காணப்படுகிறது. இக்காலகட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டும் இம்மரதன் ஓட்டப் போட்டியினை சர்வதேச தரத்தில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகளை செய்துள்ளோம்.
இப்போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 250பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் 200 உள்நாட்டு வீரர்களும் 50 வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். பிரதேச மரதன் ஓட்ட வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், சான்றுதழ்களும் வழங்கவுள்ளோம்.
குறித்த மரதன் போட்டியானது 21.1 கிலோமீற்றர், 10கிலோமீற்றர், 5கிலோமீற்றர் என 3பிரிவுகளாக நடைபெறவுள்ளது. 21.1 கிலோமீற்றர் பிரிவில் 17வயதுக்கு மேற்பட்டவர்களும், 10கிலோமீற்றர் பிரிவில் 17 முதியோரும், 5கிலோமீற்றர் பிரிவில் 12 - 17 வயதினையுடைய சிறுவர்களும் பங்குபற்ற முடியும்.
இந்நிகழ்வில் போரத்தின் பிரதி தலைவர் எம்.எஸ்.அப்துல் நாசர், பொதுச்செயலாளர் எம்.எச்.சுபுஹான் உள்ளிட்ட போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment