2014 ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை மற்றம் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26) தர்கா நகர், ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 128 பேருக்கான 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கி வைக்கப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த நஷ்டஈடு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன,மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது, 2014ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக சமர்ப்பித்திருந்தார்.
அதற்கமைய கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மூவரது குடும்பத்தினருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்தவர்கள் 12 பேருக்கு தலா 05 இலட்சம் ரூபாய் வீதமும், சிறு சொத்துக்களை இழந்தவர்கள் 84 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதமும் கடந்த மார்ச் 22ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கும் 185 மில்லியன் ரூபாய் நட்டஈடு இன்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment