ஜனாதிபதியின் விசேட கருத்திட்டத்தின் கிழ், தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும், 18 மாதத்துக்குள் 18 வகையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில், தேசிய ரீதியாகவுள்ள கிராமங்கள் தோறும் நிலவுகின்ற மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும், மக்கள் குறைகள் தொடர்பான திட்ட வரைபுகளை, ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரிகள் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊழலற்ற அபிவிருத்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்குடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கென்று நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரிகள் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குரிய கிராமங்களின் திட்ட வரைபுகளை, குறித்த பிரதேசத்தின் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியான பைஷல் இஸ்மாயிலால், ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித்திட்ட ஒருங்கினைப்பாளரும், உதவிப் பணிப்பாளருமாகிய அக்கலங்க ஹெட்டியாராச்சி, ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் தேசிய நிகழ்ச்சித் திட்ட வடக்கு, கிழக்கு இணைப்பாளர் ஐ.வேலாயுதம் ஆகியோரிடம், கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் ஊடக அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட விசேட தேவையுடைய குடும்பங்கள், விதவைகள், வறிய குடும்பங்கள் போன்றவற்றை இனங்கண்டு, அவர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், அவர்களுக்குத் தேவையான சுய தொழில் உபகரணங்களான தையல் இயந்திரம், மீன்பிடி உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், குடிசைக் கைத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள், சைக்கிள் போன்ற உபகரணங்களை வழங்கக் கோரியே, இந்த திட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது , 200 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு, 100 குடும்பங்களுக்கான மின்சார இணைப்பு, விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், வீதி அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி போன்ற உதவிகளைச் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், அது தொடர்பான குடும்பங்களை அடையாளம் கண்டு, அதற்கான திட்ட வரைபையும் சமர்ப்பிக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

0 comments:
Post a Comment