அம்பாரை மாவட்டத்திலே இருக்கின்ற எமது முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் மற்றும் இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் இப்பிராந்தியத்திலே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்திற்கு வாக்களித்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் இருக்கின்ற தயா கமகேவின் கரங்களை பலப்படுத்தக்கூடாது என வேட்பாளர் பாரிஸ் முகைதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக அல்-முனீறா வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாரிஸ் முகைதீன் தனது கட்சி ஆதரவாலர்கள் மத்தியில் நேற்று (16) உரையாற்றும் போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி அக்கட்சியின் ஆதரவாலர்களே இன்று சிலாகித்து பேசுகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் சவாரி வந்து எமது மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு தாரை வார்ப்பதற்கு முற்படுகின்றது.
இந்த செயற்பாடானது ஐக்கிய தேசிய கட்சியினை அம்பாரை மாவட்டத்தில் கட்டியெழுப்புவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இது அம்பாரையில் இருக்கின்ற அமைச்சர் தயா கமகேவுக்கு மேலும் அதிகாரத்தை வழங்குகின்ற ஒரு திருட்டுத்தனமான விடயமாகும். இந்த விடயத்தில் அட்டாளைச்சேனையில் உள்ள மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமான வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தனர் அதனூடாக அமோக வெற்றி பெற்ற தயா கமகே இன்று இனவாதம் பேசுகிறார்.
கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12ஆயிரம் ஏக்கர் காணிகள் தீகவாபி புனிதபூமிக்கு உரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று இறக்காமம் மாணிக்கமடு சிலை விவகாரத்திலும் அவர் திறைமறைவில் இருந்து செயற்பட்டார் இவ்வாறான சம்பவங்கள் எமது சமூகத்திற்கு ஒரு படிப்பினையாக உள்ளது.
எனவே, அம்பாாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் தங்களது வாக்குகளை யானைச் சின்னத்திற்கு அளித்து தமது இருப்பை இல்லாமல் செய்வதற்கு துணைபோகக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment