உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியினூடான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து, தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடுவது தொடர்பில், தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை, தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு சாதகமாக அமையவில்லை என்றால், தனித்துப் போட்டியிடவும் கூட்டணி தயாராக உள்ளது. எமக்கு, சின்னம் முக்கியமல்ல. எண்ணம் தான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஸ்கெலியா நகரிலுள்ள அம்பாள்ஸ் மண்டபத்தில், நேற்று (10) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ் முற்போக்குக் கூட்டணி, இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நுவரெலியா, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சில இடங்களிலும் த.மு.கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவுள்ள இடங்களில் தனித்தும் போட்டியிடும் வகையில் அல்லது ஐ.தே.முன்னணியில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்தால் இணைந்தும், சாதகத் தன்மை இல்லையென்றால் தனித்தும் போட்டியிட, த.மு.கூட்டணி தயாராக உள்ளது.
அவ்வாறு தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், முற்போக்குச் சிங்கள மற்றும் முற்போக்கு முஸ்லிம் மக்களின் பிரதநிதிகளையும் இணைத்துக்கொண்டே த.மு.கூட்டணி போட்டியிடத் தயாராக உள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment