பிரதான செய்திகள்

பிரதமராவதற்கு என்னைவிட அதிக தகுதி படைத்தவர் பிரணாப் முகர்ஜியே: மன்மோகன் சிங்

நாட்டின் பிரதமராவதற்கு தன்னைவிட அதிக தகுதி படைத்தவர் பிரணாப் முகர்ஜியே என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தான் அரசியல்வாதியானது ஒரு விபத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் குடியரத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது நினைவலைகளைப் பதிவு செய்துள்ள 'தி கோயெலிஷன் இயர்ஸ்' (The Coalition Years) புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று (13) நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய மன்மோகன் சிங், "கடந்த 2004ஆம் ஆண்டில் சோனியா காந்தி என்னைப் பிரதமராக தேர்வு செய்தார். பிராணப் முகர்ஜி போன்ற திறமனையானவர் இருந்தபோதும் சோனியா காந்தி என்னைப் பிரதமராக தேர்வு செய்தார். 

அப்போது, ஒருவேளை பிரணாப் இது குறித்து வருத்தப்பட நேர்ந்திருந்தால் அந்த வருத்தம் இயல்பானதே. ஏனெனில், நாட்டின் பிரதமராவதற்கு என்னைவிட அதிக தகுதி படைத்தவர் பிரணாப் முகர்ஜியே. ஆனால், அந்தவேளையில் அந்த முடிவில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் இருந்தது. 

நான் அரசியல்வாதியானதும்கூட ஒரு விபத்தே. ஆனால், பிரணாப் விருப்பப்பட்டு அரசியல்வாதியானவர். தற்காலத்தில் மிகச் சிறந்த காங்கிரஸ்காரர் பிரணாப் முகர்ஜி" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, திமுகவின் கனிமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அகிலேஷ் யாதவ், "பிரணாப் முகர்ஜியின் இந்தப் புத்தகம் இளம் அரசியல்வாதிகளுக்கு முக்கியக் குறிப்புகளை அளிக்கும்" என்றார். "தேர்வுக்கு முன்னதாக ஒரு மாணவருக்கு உதவும் கையேடு போல் தங்களது இந்தப் புத்தகம் தேர்தலுக்கு முன்னதாக இளம் அரசியல்வாதிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்" எனக் கூறினார்.

பிரணாப் முகர்ஜி தனது புத்தகம் குறித்து கூறும்போது, "ஒரு அரசியல்வாதியாக பல்வேறு நபர்களையும் விவகாரங்களையும் நான் எப்படிப் பார்த்தேன் என்பதைப் பற்றியே இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். முடிந்தவரை எவ்வித சார்பும் இன்றி எழுதியிருக்கிறேன். இருப்பினும் நான் காங்கிரஸ் செயற்பாட்டாளர் என்பதால் ஒரு வரலாற்றுப் பதிவர் போல் சார்பற்றவராக இருந்திருப்பேன் என சொல்ல முடியாது" என்றார்.

2 யானைகளுக்கு சமம்..

விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிரணாப் முகர்ஜிக்கு யானையைப் போன்று நினைவாற்றல் உண்டு எனப் பாராட்டினார். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறுக்கிட்டு, ஒரு யானை அல்ல. இரண்டு யானைக்கு சமமான நினைவாற்றல் உண்டு என்று கூறினார். சோனியாவின் இந்த ஒப்பீட்டை அரங்கில் இருந்த அனைவரும் ரசித்தனர்.

தொடர்ந்து பேசிய யெச்சூரி, "எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றால் பிரணாப் முகர்ஜி கோபப்பட்டுவிடுவார். அவருக்கு உடன்பாடு இல்லாத விஷயத்துக்கு ஒருபோதும் இசைவு தெரிவிக்கமாட்டார்" என்று கூறினார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment