இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிந்தவூரில்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'ஸ்ரமிக்க சுரெக்கும' நடமாடும் சேவை இன்று (27) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நிலையான நாடு என்ற நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் இவ்வேலைத்திட்டம் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையிலிருந்து சுமார்17 இலட்சம் போ், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ள போதிலும் அவா்கள் தொடா்பான போதிய தகவல்கள், அவா்களது தொழில் உறுதிப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள், தொழில் புரிந்துவரும் நாட்டில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடா்பில் போதிய தகவல்கள் இல்லாமலுள்ளன.
இதற்கமைவாக புலம்பெயர் தொழிலாளர்களது பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் பிரதேசங்கள் தோறும் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புலம்பெயா் தொழிலாளர்கள், எமது நாட்டின் முக்கிய வளமாகக் காணப்படுகின்றனா். இவா்களது உழைப்பின் மூலம் நாடு பெருமளவிலான அன்நிய செலாவணியை வருமானமாகப் பெற்று வருகின்றது.
இவா்களது பாதுகாப்பை உறுதி செய்வதும் இவா்களது சேவையையும், உழைப்பையும் சட்டத்துக்குட்பட்ட முறையில் மாற்றியமைத்து அவா்களது குடும்பத்தினருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக அமைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளர் றிபா அப்துல் ஜலில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர் . இதன்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.



0 comments:
Post a Comment