நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி, பலாத்காரமாக புதிய அரசியலமைப்பை கொண்டுவர அரசாங்கம் முயல்வதாகவும், யாப்பை திணித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மறைந்த நாகொட அமரவங்ச தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மருதானை விகாரைக்கு நேற்று (23) விஜயம் செய்த அவர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மல்வத்து ,அஸ்கிரிய ,கோட்டே உட்பட சகல பீடங்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கத்தோலிக்க சபையும், யாப்பு விடயத்தை அவதானமாக கையாள வேண்டும் என்று கோரியுள்ளது. முழு நாடும் புதிய அரசியலமைப்பு உருவாவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பலாத்காரமாக புதிய யாப்பை திணிக்க அரசாங்கம் முயல்கிறது.
பிக்குமார்கள் சொல்வதை கூட இந்த அரசாங்கம் செவிமடுப்பதாக இல்லை.பெரும்பான்மையினரும், முழுநாடும் புதிய யாப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் கூறிவருகிறது. இந்த புதிய யாப்பினுாடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றார்.
உள்ளூராட்சி தேர்தல் தாமதமாவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் நடத்தும் திகதி பற்றி கூறி வருகின்றனர். தேர்தல் எப்பொழுது நடத்தினாலும் நாம் அதற்கு தயாராக இருக்கிறோம். தேர்தலுக்கு முகங்கொடுக்க பயந்தே அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது.உள்ளூராட்சி தேர்தலில் நாம் அமோக வெற்றியீட்டுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment