நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், தற்கொலைசெய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து, மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க தமிழக சுகாதாரத் துறை முடிவுசெய்துள்ளது.
மருத்துவராக ஆவதே தனது லட்சியமாக கொண்டிருந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணம், மாணவர்களுக்கு உடனடியாக மன ஆலோசனை வழங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் சுகாதாரத் துறையின் முயற்சி சரியானது என்றாலும் அது காலம்தாழ்த்தி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்றும், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்னையை திசைதிருப்பும் முயற்சி இது என்றும் சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் கடுமையாக உழைப்பதாகவும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்தார்.
''தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுரிகளில் 3,500 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை பெற ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது நீட் தேர்வு கட்டாயம் என்பதால் அதில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று அவர் கூறினார்.
''அனிதா போல கடும் மனஉளச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை காப்பாற்ற உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்க முடிவெடுத்துள்ளோம்,'' என்றார் ராதாகிருஷ்ணன்.

0 comments:
Post a Comment