அறுகம்பே சர்வதேச 'Half Marathon' ஓட்டப்போட்டியின் 21.1Km பிரதான மரதன் போட்டி நிகழ்ச்சியில், ஆண்கள் பிரிவில் வத்தேகமயைச் சேர்ந்த நிசான் மதுரங்க முதலாமிடத்தினையும், நுவரெலியாவைச் சேர்ந்த அருன பண்டார இரண்டாமிடத்தினையும், அவிசாவளையைச் சேர்ந்த கெளும் தர்மரத்ன மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டி நிகழ்ச்சியின் பெண்கள் பிரிவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எமிலி ஒலிவியர் முதலாமிடத்தினையும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அஞ்சலினா பென்டின்புரோ இரண்டாமிடத்தினையும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸஸ்கா பொனசியோ மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11) அறுகம்பேயில் கோலாகலமாக இடம்பெற்றது.
இம்மரதன் ஓட்டப்போட்டியில், 12நாடுகளிலிருந்து 60 வெளிநாட்டு வீரர்களும், 140 உள்நாட்டு வீரர்களும் என சுமார் 200பேர் கலந்துகொண்டனர். தனது இரு கண்களையும் இழந்து பார்வையற்ற நிலையில், கொழும்பைச் சேர்ந்த வீரர் ஒருவரும் இப்போட்டியில் கலந்துகொண்டார். அவர் தனது சகோதரர் ஒருவரின் துனையுடன் குறித்த மரதன் போட்டியில் ஓடுவதற்காக ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
21.1Km, பிரதான மரதன், 10Km மரதன், 5Km மரதன் எனும் அடிப்படையில் இப்போட்டிகள் 4 பிரிவுகளாக இடம்பெற்றது. 5Km மரதன் ஓட்டப்போட்டி இரு பிரிவுகளாக இடம்பெற்றது. இதில் 12-17வயதுக்குட்பட்ட சிறுவர்களும், 45வயதுக்கு மேற்பட்டவர்களும் (முதியோர்களும்) கலந்துகொண்டனர்.
அறுகம்போ சின்ன உல்லை அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான இம்மரதன் ஓட்டப்போட்டி பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக, பசறிச்சேனையை அடைந்து பின்னர் ஹிஜ்ரா வீதியினூடாக சென்று அங்கிருந்து மீண்டும் பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக, ஊரணி வளைவை அடைந்து இறுதியாக அறுகம்பே பாலத்தில் நிறைவுபெற்றது.
குறித்த மரதன் போட்டியின் 10Km போட்டி நிகழ்ச்சி ஆண்கள் பிரிவில் அவிசாவளையைச் சேர்ந்த விமல் காரியவசம், பெண்கள் பிரிவில் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த அன்ன பெட்சோல்ட், ஆகியோர் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டனர். அதேபோன்று சிறுவர்களுக்கான 5Km போட்டி நிகழ்ச்சியில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஹானி அகமட், முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார். முதியோர்களுக்கான 5Km போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரிம் பிலன்கொப்ட், பெண்கள் பிரிவில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த லிஸ் ஹெய்லர் ஆகியோர் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் என்பனவும் அதிதிகளினால் வழங்கப்பட்டது. பார்வையிழந்த நிலையில் 21.1Km தூரத்தை ஓடிமுடித்த கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த காலித் ஒஸ்மான் சகலரது பாராட்டினையும் பெற்று, இந்நிகழ்வின் போது அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இதேவேளை 21.1Km, பிரதான அரை போட்டியில் முதலிடத்தினை பெற்ற ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு Aprota Villas அறுகம்பே நிறுவனத்தின் சுற்றுலா சொகுசு விடுதியில் ஒரு தினம் இலவசமாக தங்கிச்செல்வதற்கான வாய்ப்பினையும் அந்த நிறுவனம் வழங்கியது. அத்துடன் இப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை Paddyway Tours நிறுவனம் வழங்கியது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு, இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் Aprota Villas அறுகம்பே நிறுவனத்தின் பிரதான அனுசரனையில், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம், இலங்கை சுற்றுலாத்துறை மேம்படுத்தல் பணியகத்துடன் இணைந்து, இப்போட்டி நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் இராணுவத்தின் 242வது கட்டளைத்தளபதி பிரிகேடியர் எஸ்.ரீ.ஜீ.ரனசிங்க, இராணுவத்தின் 241வது கட்டளைத்தளபதி கேணல் ஜானக்க விமலரத்ன, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித், அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி சில்வா, பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஜமாஹிம், இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜஃபர், அறுகம்பே சுற்றுலாத்துறை ஹோட்டல் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இராணுவத்தின் 242வது படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்பு மற்றும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அறுகம்பே அரை மரதன் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் 4வது தடவையாகவும் மரதன் போட்டியினை நடாத்தி வரவேற்பினை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

0 comments:
Post a Comment